சேலம், பிப்.21: பெங்களூருவிலிருந்து வேலைதேடி சேலம் வந்ததொழிலாளி அரசு பஸ்சிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் விஷ்ணுபுரம் விநாயகம் தியேட்டர் பின்பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (49). கூலித்தொழிலாளியான இவர் ஓட்டலில் வேலை தேடி நேற்றுமுன்தினம் பெங்களூரில் இருந்து அரசு பஸ்சில் சேலம் வந்தார். வீட்டிலிருந்து புறப்படும்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அப்போது குடும்பத்தினர் காய்ச்சல் சரியான பிறகு செல்லுமாறு கூறினர்.
ஆனால் சிவக்குமார், குணமாகி விடும் எனக்கூறி சேலம் புறப்பட்டார். நேற்றுஅதிகாலை 2.30 மணிக்கு சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட்டிற்கு பஸ் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியும், சிவக்குமார் எழுந்திருக்கவில்லை. கண்டக்டர் எழுப்பியும் எழுந்திருக்காததால் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது சிவக்குமார் இறந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.