கம்பம், மார்ச் 13: கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இருந்து ஏராளமான கதிரடிக்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் அறுவடை முடிந்து இந்த இயந்திரங்களை லாரிகள் மூலம் ஏற்றிக்கொண்டு அடுத்த பகுதிக்கு கொண்டு செல்கின்றன.
அதன்படி நேற்று மாலை கம்பம் அருகே உள்ள அண்ணாபுரத்தில் அறுபடை பணிகள் முடித்துவிட்டு இயந்திரத்தை லாரிகளில் ஏற்றிக்கொண்டு காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள வயல்களுக்கு கொண்டு செல்வதற்காக மாலையம்மாள்புரம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தன.
அப்போது மாலைக்காரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியில் இருந்த கதிர் அடிக்கும் இயந்திரம் உயரமாக இருந்ததால் அவ்வழியாக சென்ற மின் வயரில் சிக்கிக்கொண்டது. அப்போது மின் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு மின் இணைப்பு துண்டித்தது. இதனால் மின்சாரம் இயந்திரத்தின் மீது கடத்துவது தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.