விருதுநகர், டிச. 3: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ராஜபாளையம், விருதுநகர் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் 30 மாணவ, மாணவிகளுடனான காபி வித் கலெக்டர் 47வது கலந்துரையாடல் நிகழச்சியில் கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். மாணவ, மாணவியரின் லட்சியம், எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து கலெக்டர் பேசுகையில், பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேர வேண்டும். மருத்துவப்படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும்.
பிளஸ்2 படிப்பை முடித்த உடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றார்.