சித்தூர் : யாதமரி அடுத்த காந்திபுரம் கிராமம் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது. ஏரியில் மர்மநபர்கள் விஷம் கலந்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது.சித்தூர் மாவட்டம், யாதமரி அடுத்த காந்திபுரம் கிராமம் அருகே ஏரி உள்ளது. இந்த ஏரியை அதேகிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குத்தகைக்கு ஏலம் எடுத்தார். பின்னர், ஏரியில் 35 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை ராஜா ஏரிக்கு சென்றார். அப்போது, ஏரியில் வளர்க்கப்பட்ட அனைத்து மீன்களும் செத்து கரையோரம் ஒதுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து ராஜா யாதமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஏரியில் உள்ள அனைத்து மீன்களும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராஜாவுக்கு முன்விரோதிகள் யாராவது இருக்கிறார்களா? அவர்களில் யாராவது ஏரியில் உள்ள மீன்களை அழிக்க விஷம் கலந்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘மர்மநபர்கள் வேண்டுமென்றே ஏரியில் விஷம் கலந்து உள்ளார்கள். இதனால், ஏரியில் உள்ள அனைத்து மீன்களும் உயிரிழந்தது. எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வளர்க்கும் ஆடுகள், மாடுகள் அனைத்தும் கிராமம் அருகே உள்ள ஏரியில் குடிநீர் குடித்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக ஆடுகள், மாடுகள் உயிர் தப்பியது.ஏரியில் விஷம் கலந்த மர்மநபர்களை போலீசார் விரைவில் கைது செய்து, தண்டனை வழங்க வேண்டும். அதேபோல், பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்’ என்று கோரிக்ைக விடுத்துள்ளனர்….