போடி ஏப்.17: போடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் ராம்குமார். போடி வடக்குமலை ஊத்தாம்பரை பகுதியில் இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று ராம்குமார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த காட்டுமாடு திடீரென மூர்க்கமாகி ராம்குமாரை தூக்கிவீசியது. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து காட்டு மாட்டை விரட்டினர்.
மேலும் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ராம்குமாரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் குரங்கணி காவல் நிலைய எஸ்.ஐ செல்லப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு மல்லிப்பட்டி பகுதியில் காட்டு மாடு தாக்கி சங்கர பாண்டியன் என்ற விவசாயியும் தற்போது சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.