காஞ்சிபுரம், ஜூன் 22: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியல் காணிக்கையாக ₹29.56 லட்சம் செலுத்தியுள்ளனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர், உற்சவர், தாயார், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள கோயில் உண்டியலில் பணம், நகை, வெள்ளி பொருட்கள், முதலியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் எண்ணும் பணி கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில், கோயில் அலுவலர்களுடன் சேர்ந்து, தொண்டு நிறுவன ஊழியர்களும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.அதன்படி, பக்தர்கள் காணிக்கையாக 29 லட்சத்து 56 ஆயிரத்து 359 ரூபாயும், 39 கிராம் 400 மில்லி தங்கமும், 280 கிராம் 900 மில்லி வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.