காஞ்சிபுரம், மார்ச் 25: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் உத்தரவின் பேரில் சென்னை மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மேலாளர் சியாம் சுந்தர் தலைமையில், மேலாளர் (கிடங்கு) குமார், உதவி மேலாளர்கள் (கணக்கு) அருண், (சில்லறை விற்பனை) பாரதி மற்றும் குழுவினர் டாஸ்மாக் பார்களில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வேளச்சேரி மெயின் ரோடு, மேடவாக்கத்தில் ரூ.8,250 மதிப்புள்ள 41 மது பாட்டில்களும், ரூ.2,970 மதிப்புள்ள 17 பீர் பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. இதேபோல் திருமுடிவாக்கம் மற்றும் கொல்லச்சேரியில் ரூ.5,750 மதிப்புள்ள 29 மது பாட்டில்களும், ரூ.1,360 மதிப்புள்ள பீர் பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. கன்னடபாளையம் பகுதியில் ரூ.3,600 மதிப்புள்ள 22 மது பாட்டில்களும், ஆதம்பாக்கத்தில் ரூ.3,310 மதிப்புள்ள 23 மது பாட்டில்களும், ரூ.1,020 மதிப்புடைய பீர் பாட்டில்களும்,
கீழ்கட்டளை பகுதியில் ரூ.3,900 மதிப்புள்ள 24 மது பாட்டில்களும், பள்ளிக்கரணையில் ரூ.4,340 மதிப்புள்ள 31 மது பாட்டில்களும் ரூ.2600 மதிப்புள்ள 7 பீர் பாட்டில்களும் என மொத்தம் 170 பிராந்தி, விஸ்கி மது பாட்டில்களும், 38 பீர் பாட்டில்களும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 760 மதிப்புள்ள மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. தேர்தல் விதிகளை மீறி மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.