காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள், தங்களது பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக சரி செய்து தீர்வு கண்டு வருகின்றனர்.இதையொட்டி, 48வது வார்டு டெம்பிள் சிட்டி பகுதியில் முதல்முறையாக தெரு தெருவாக சென்று மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாக முகாம் நேற்று நடந்தது.மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, முகாமை தொடங்கி வைத்தார். துணைமேயர் குமரகுரு நாதன், மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன், எஸ்கேபி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் பொதுமக்கள் சார்பில் அடிப்படை தேவைகளான வீட்டு வரி, குடிநீர் வரி, புதிதாக சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் வைத்தனர். அதில் நிறைவேற்ற கூடிய கோரிக்கைகளை உடனுக்கு உடன் நிறைவேற்றப்பட்டன. மேலும், 10க்கும் மேற்பட்டோர், தங்களது வீட்டு வரியை நேரடியாக முகாமில் செலுத்தினார். மீதமுள்ளவர்கள் அடுத்த முகாமில் வரியை செலுத்துவதாக தெரிவித்தனர்.இதில் மாநகராட்சி ஆணையர் நாராயணன், திமுக நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், நாத்திகம் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….