காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.20.25 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில். இக்கோயிலில், கடந்த ஜனவரி 9ம்தேதிக்கு பிறகு, நேற்று முன்தினம் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் பிரித்திகா, வரதராஜ சுவாமி கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், சித்ரகுப்த சுவாமி கோயில் செயல் அலுவலர் அமுதா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் பக்தர்கள், தன்னார்வலர்களால் உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், 12 பொது உண்டியல்களில் 18 லட்சத்து 60 ஆயிரத்து 612 ரூபாயும், கோயில் திருப்பணி உண்டியலில் 1 லட்சத்து 1 ஆயிரத்து 405 ரூபாயும், கோசாலை உண்டியலில் 63 ஆயிரத்து 598 ரூபாய் என மொத்தம் 20 லட்சத்து 25 ஆயிரத்து 615 ரூபாயும், 31 கிராம் தங்கமும், 225 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.