காஞ்சிபுரம், நவ.16: வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மழை வெள்ள மற்றும் மீட்பு உபகரணங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அந்த வகையில் காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள மழை வெள்ள தடுப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ள வெள்ள தடுப்பு உபகரணங்கள் மற்றும் மடம் தெருவில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், தாட்டித்தோப்பு முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்படவுள்ள இடம், ஆசிரியர் நகரில் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் உத்திரமேரூர் ஒன்றியம், மாகரல் ஏரியில் நடைபெற்று வரும் பழுதுபார்த்தல், புதுப்பித்தல், புனரமைத்தல் பணி மற்றும் உத்திரமேரூர் – வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் பணியினையும் ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, சிலாம்பாக்கம் கிராமத்தின் அருகே செய்யாறு ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பெரியண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் நீங்முடியோன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.