Saturday, May 25, 2024
Home » காசிமேட்டில் 300க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

காசிமேட்டில் 300க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

by kannappan

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக வடசென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்தன. மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியதில் இருந்து வடசென்னை பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், காசிமேடு சேவியர் தெருவில் பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மரம் ஒன்று விழுந்தது. இதனால் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் சென்றனர். மரம் விழுந்ததால் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் வந்து மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல், ராயபுரம் கிழக்கு மாதா கோயில் தெரு, வடக்கு மாதா கோயில் தெரு, எஸ்என் செட்டி தெரு, காவலர் குடியிருப்பு, ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை ஆகிய பகுதிகளிலும் மரங்கள் விழுந்தன. தீயணைப்புத்துறை அதிகாரி பரமேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வந்து மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பாரிமுனை ராஜாஜி சாலை கடற்கரை ரயில் நிலையம் எதிரே மின் கம்பம் பலத்த காற்று காரணமாக விழுந்தது. மண்ணடி பகுதியில் மரம் விழுந்தது. பூக்கடை நைனியப்பன் தெரு, சவுகார்பேட்டை தங்க சாலை தெரு உள்ளிட்ட வடசென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்களும் மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர்.மேலும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை வீசிய பலத்த காற்றின் காரணமாக சேதம் அடைந்துள்ளன. இதை மீன்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் பாதிப்பு காரணமாக கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. காற்றும் வேகமாக வீசியது. இதன் காரணமாக, சாலைகளும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியது. இதையும் சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், தீயணைப்பு, காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பகுதி திமுக செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரமாண்ட தேசியக்கொடி பறப்பது வழக்கம். தற்போது ஏற்பட்ட புயலின் காரணமாக தேசியக்கொடி சேதம் அடைந்துள்ளது….

You may also like

Leave a Comment

7 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi