தஞ்சை: தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சிங்கார வடிவேலு(84). காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பிஏ சட்டம் படித்துள்ளார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு சுகந்தி என்ற மகளும், திருவேரகன் என்ற மகனும் உள்ளனர். இவர் 1979, 1980-84, 1984-89 என 3 முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி எம்பியாக பதவி வகித்தார். மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயம், கிராம மேம்பாடு மற்றும் விளையாட்டு ஆகிய துறை கமிட்டிகளில் பொறுப்பில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிங்கார வடிவேலு இறந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். …