Sunday, June 9, 2024
Home » காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம் பகுதிகளில் வானில் கேட்டவெடி சத்தத்தால் பொதுமக்கள் பீதி

காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம் பகுதிகளில் வானில் கேட்டவெடி சத்தத்தால் பொதுமக்கள் பீதி

by kannappan

காங்கயம் : காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானில் கேட்ட வெடி சத்தத்தால் மக்களிடையே பீதி நிலவியது. திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10 மணி அளவில் வானில் காதை பிளக்கும் அளவுக்கு வெடி சத்தம் கேட்டது. அப்போது வீடுகளில் உள்ள பாத்திரங்கள் அதிர்ந்தன. இந்த சத்தம் கிராமப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வானில் ராணுவ விமானங்கள் பறக்கும்போதும், போர் விமானப் பயிற்சியின்போதும் உருவாகும் வெள்ளைக்கோடு போன்ற படங்களை பகிர்ந்து, இது விபத்தாக இருக்கலாம் என தகவல்களை பரவின. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து முன்னாள் படைவீரர் ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து அவ்வப்போது பயிற்சிக்காக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வான் பரப்பில் பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. சமீபகாலமாக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜாஸ், மிக் மற்றும் ரபேல் ரக போர் விமானங்களில் விமானப்படையினர் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சி 17 க்ளோப் மாஸ்டர்,சி 130ஜெ சூப்பர் ஹெர்குலீஸ் ஆகிய ராணுவ ட்ரான்ஸ் போர் விமானங்களையும் பயிற்சிக்காக பயன்படுத்தி வருகின்றனர்.சூலூர் விமானப்படை ஓடு தளத்தில் இருந்து கிளம்பும் இந்த விமானங்கள் திருப்பூர் மாவட்டத்தின் வான் பரப்பில் பறந்தபடி உச்சகட்ட வேகத்தில் செல்வது, ரேடாரில் சிக்காமல் தாழ்வாக பறந்து செல்வது, எதிரி நாட்டு வான் பரப்பில் மிக உயரமாக ஊடுருவி உளவு சேகரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சோனிக் பூம் எனப்படும் முறையை கையாண்டு ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணிக்க எரிபொருளை வெளியிட்டு எரிக்கும்போது கிடைக்கும் அதிக அழுத்தம் காரணமாக உச்சபட்ச வேகத்துடன் போர் விமானம் முன்னோக்கி பாயும்.எரிபொருள் மொத்தமாக எரியும்போது வெடி சத்தம் எழும். வானில் இப்படி நிகழும்போது பரவலாக பல கிலோ மீட்டருக்கு இந்த சத்தம் கேட்கும். மேலும் லேசான அதிர்வுகளும் ஏற்படும். அதிக ஈரப்பதம் மேகங்களில் இருக்கும்போது இவ்வாறு சோனிக் பூம் ஏற்படுத்தி வேகமாக செல்லும்போது மிக மிக அதிக சத்தம் காதை பிளக்கும் வகையில் இருக்கும். இது போன்ற சத்தமே இந்த பகுதிகளில் கேட்டிருக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பீதியடைய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஆனால் வெடி சத்தம் கேட்டது முதல் சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகள் கிளம்பி வந்தன. ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்து எதுவும் நடைபெறவில்லை எனவும், விபத்து என பரவிய தகவல் புரளி எனவும் தெரியவந்தது….

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi