காங்கயம்: காங்கயம் அருகே பஞ்சு அரைக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. காங்கயம்- கோவை சாலையில் உள்ள தனியார் பஞ்சு அரைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை தொழிற்சாலையில் பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரெனெ மின்சார பழுது காரணமாக தீ பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மளமள வென பற்றி எரிய ஆரம்பித்தது. இதையறிந்த அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க போராடினர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிந்தனர்.
தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயணைப்பு வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயினை அணைக்க போராடினர். பின்னர் சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முழுவதுமான அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் பஞ்சு அரைக்கும் எந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.