சேந்தமங்கலம், பிப்.28: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி ஊராட்சி, கொல்லிமலை அடிவாரப் பகுதியான புதுக்கோம்பை வனப்பகுதியில் கள்ளத் துப்பாக்கியுடன் சிலர் வேட்டையாடி வருவதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.
அப்போது, வனப்பகுதியையொட்டிய ஏரியில் கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்த கொல்லிமலை சேலூர் நாடு சேப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் விவசாயியான சதீஷ்குமார்(37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் புதுக்கோம்பை பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததும், கள்ளத் துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரது வீடு மற்றும் தோட்டங்களில் மான் தோல் மற்றும் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், நேற்று வீடு மற்றும் தோட்டங்களில் வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.