நெல்லிக்குப்பம், ஏப். 15: நெல்லிக்குப்பம் அடுத்த மேல் குமாரமங்கலம் பகுதியில் புதுச்சேரி மாநில கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நெல்லிக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர்கள் நாராயணமூர்த்தி, கார்த்திகேயன், சதீஷ்குமார், அருள் பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மேல் குமாரமங்கலம் பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நீண்ட நேரம் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை முருகன் கோயில் தெருவை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் லூர்துநாதன் (37) என்பதும், புதுச்சேரி மாநில கள்ளச்சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து லூர்து நாதனை கைது செய்து, அவரிடமிருந்து 55 லிட்டர் புதுச்சேரி மாநில கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.