புழல்: செங்குன்றம் அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு ஆய்வாளர் முகேஷ்ராவ் தலைமையில், ஊழியர்கள் செங்குன்றம் மற்றும் பாடியநல்லூர் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில், பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மூட்டைமூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,250 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த சகோதரர்களான முகமது செரீப்(25), நாகூர் மீரான்(22) ஆகியோர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு கள்ளச்சந்தையில் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். …