களக்காடு, ஏப்.22: களக்காடு மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் மலையடிபுதூர் பீட் மாவடி மொட்டை பகுதியில் நேற்று மாலை திடீர் என காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் மள,மளவென பரவி வருகிறது. பல ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிந்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் மர கொப்புகளை வைத்து அடித்தும், மண், கற்களை அள்ளி போட்டும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீயினால் பல அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள சுக்குநாரி புற்கள் கருகி வருவதாக கூறப்படுகிறது. அரிய வகை மூலிகை செடிகள், மரங்களும் காட்டுத்தீயில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மலையில் பற்றி எரியும் தீ ஊர் பகுதிகளில் இருந்து பார்க்கும் போது பகலில் புகை மூட்டமாகவும், இரவில் தீப்பிளம்பாகவும் தெரிகிறது. இந்த திடீர் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. இதுபற்றி வனத்துறையினர் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.