களக்காடு, பிப்.3: களக்காடு மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை கடந்த 2001வது ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு தென் மேற்கு பருவமழையின் போது அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. அதுபோல் நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் போதும் அணை நிரம்பாமல் காட்சி அளித்தது. இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பச்சையாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது. இதனைதொடர்ந்து பச்சையாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து களக்காடு பச்சையாறு அணை இன்று (3ம் தேதி) திறக்கப்படுகிறது. சபாநாயகர் அப்பாவு பகல் 10.30 மணிக்கு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். நாங்குநேரியன் கால்வாய், பச்சையாறு, மடத்து கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 110 குளங்களும், 9 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.