களக்காடு, மார்ச் 27:களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழில், விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 1 மாதமாக தெற்கு மீனவன்குளத்தில் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. பொத்தைசுத்தி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தெற்கு மீனவன்குளத்தில் தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், ‘குழாய் உடைப்பு குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். எனினும் உடைப்பு சீரமைக்கப்படவில்லை. இதனால் தெற்கு மீனவன்குளம் கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால், கடும் வெப்பம் நிலவுகிறது. வெப்பத்தால் தண்ணீரின் தேவை அதிகரித்து வரும் நிலையில் தெற்கு மீனவன்குளத்தில் தண்ணீரே கிடைக்காத அவல நிலை ஒரு மாதகாலமாக நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, குழாய் உடைப்பை சீரமைத்து தெற்கு மீனவன்குளம் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும்” என்றார்.