மதுரை, நவ. 17: மதுரை, கே.புதூர், சங்கர் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஹூசைன் சையது இப்ராஹிம்(40). இவர் கே.கே.நகரில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரியில் பணிபுரியும் ஒருவரிடம், மூன்றாம் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவர் ஒருவர் தகராறு செய்ததுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை கண்ட ஹூசைன் சையது இப்ராஹிம், அந்த மாணவரை கண்டித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறியதால், ஆத்திரமடைந்த மாணவர் ஹூசைனையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பின், கல்லூரி முதல்வரிடமும் மாணவர் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்த பேராசிரியர் ஹூசைனை வழிமறித்து, அவதூறாக பேசியுடன் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.