வேட்டவலம், செப்.6: வேட்டவலத்தில் கடன் தொல்லை காரணமாக கல்குவாரி குட்டையில் குதித்து சென்னை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சி பெரியார் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த்(28). இவர் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை பிரசாந்த் தனது வீட்டின் அருகே ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கல்குவாரியில் இறங்கி சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர தேடலுக்கு பிறகு பிரசாந்தின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரசாந்தின் தாயார் குமுதவல்லி அளித்த புகாரின்பேரில் வேட்டவலம் சப்- இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட காவலர் பிரசாந்துக்கு கவுரி(27) என்ற மனைவியும், தமிழ் அமுதன் (2) என்ற மகனும் உள்ளனர்.