பேராவூரணி, மார்ச்19: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழுமங்குடா அரசுப் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் முதலில் பள்ளி அளவிலும் அடுத்து ஒன்றிய ,மாவட்ட அளவில் கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதில், கதை சொல்லுதல் போட்டியில் நான்காம் வகுப்பு மாணவர் முகம்மது ஹமீஸ் முதல் இடத்தையும்,கண்காட்சி (அறிவியல் செயல்திட்டம்) போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவி தனுஷ்யா இரண்டாவது இடத்தையும்.பாட்டுப் போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவி சபீலாபானுமூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஷஜிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி கீர்த்திகா,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நந்தினி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பாராட்டினர்.