வேதாரண்யம், ஆக.11: கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். கூட்டத்தில் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் லலிதா கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊராட்சிகளுக்கு கடந்த ஓராண்டாக அணைக்கரை கூட்டு குடிநீர் மற்றும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் சரிவர வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக சீராக வழங்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் இருக்கும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசனைபடி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவித்து தகுதியுடைய ஊராட்சிகளுக்கு கூடுதல் வீடுகள் வழங்க வேண்டும். ஊராட்சியில் வறுமைகோடு பட்டியில் உள்ளவர்களுக்கு ஆடு, மாடு, மற்றும் கால்நடை வளர்க்கும் கொட்டகை ஊராட்சி மன்ற தலைவர் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.