தேனி, அக்.20: கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டிகள் நேற்று முன்தினம் போடியில் நடந்தது. இப்போட்டியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தேனி அரசினர் ஐடிஐ.யை சேர்ந்த கோபா தொழிற்பிரிவு மாணவி மாரீஸ்வரி பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அளவில் முதலிடம் பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் வழங்கினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தேனி அரசினர் ஐடிஐ முதல்வர் சேகரன் மற்றும் ஐடிஐ அலுவலர்கள் பாராட்டினர்.