தரங்கம்பாடி, ஜூலை 19: தரங்கம்பாடி உப்பனாற்றில் ரூ.93 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் மகிமலை ஆறு மற்றும் சிறு, சிறு கால்வாய் நீர் உப்பனாறு முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. பல நேரங்களில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் உப்பனாறு வழியாக மகிமலையாற்றில் கலந்து ஆற்று நீர் உப்பு நீராக மாறி விடும் அபாயம் தொடர்ந்து இருந்ததால் தரங்கம்பாடி உப்பனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் எதிரொலியாக சட்டமன்ற கூட்ட தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தரங்கம்பாடியில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணி துவங்கி உள்ளது. தடுப்பணையுடன் கண்ணப்பமூலை, தில்லையாடி உள்ளிட்ட 6 இடங்களில் புதிதாக ரெகுலேட்டர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.