ஈரோடு, பிப்.7: ஆசிரியர் தங்களை வெறுப்புடன் நடத்துவதால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஈரோடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் படித்து வரும் 6 மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த 2 வருடங்களாக எங்களது மனதை காயப்படுத்தும் விதமாக உள் நோக்கத்துடன் நடத்து கொள்கிறார்.
மேலும், எவ்வித காரணமுமின்றி எங்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர். அதுமட்டுமின்றி, அரசு எங்களுக்கு வழங்கிய சைக்கிள் உள்ளிட்ட இலவச பொருள்களைத் திருப்பி ஒப்படைக்குமாறும் கேட்டு துன்புறுத்துகின்றனர். நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் எங்கள் மீது வெறுப்புடன் நடந்து கொள்கின்றனர். இதனால், நாங்கள் மனதளவில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகி படிக்கவே வேண்டாம் எனும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்கள் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்டு நாங்கள் எவ்வித இடையூறுமின்றி கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுதெரிவித்தனர்.