கரூர், ஜூன் 2: நாள்தோறும் வெளுத்து வாங்கிய வெயிலுக்கு மத்தியில் நேற்று மாலை அரை மணி நேரம் கரூர் மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இதமான, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுதும் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து, பொதுமக்களை வெப்பத்தில் இருந்து காப்பாற்றி வந்தது. இதே போல, கரூர் மாநகர பகுதிகளிலும் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து, கரூரை குளிர்வித்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகல் நேரங்களில் வழக்கத்தை விட மிக அதிகமான வெப்பம் தாக்கி மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்த வெப்பம் காரணமாக சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களும் கடுமையாக சிரமத்தை அனுபவித்து வந்தனர். அக்னி நட்சத்திர வெயில் முடிந்து, ஜூன் மாதம் பிறந்ததும் தென்மேற்கு பருவமழை துவங்கி விடும். அப்போது வெப்பம் தணியும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று பகல் முழுவதும் வாட்டி வதைத்த வெயிலுக்கு பிறகு மாலை 5 மணி முதல் அரை மணி நேரம் கரூர் மாநகரம் முழுவதும் மிதமான மழை பெய்து. வெப்பத்தை தணித்தது. இந்த சீதோஷ்ணநிலையின் திடீர் மாற்றம் காரணமாக அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.