தர்மபுரி, ஜூன் 8: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சாந்தி நேற்று தொடங்கி வைத்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தர்மபுரி மாவட்ட தொழில் மையம் அருகில், நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில், மரக்கன்றுகள் நட்டு, கலெக்டர் சாந்தி, திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகம் எங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையை சார்ந்த, சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு ய்ய முடிவு செய்து, தற்போது மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது,’ என்றார். இந்நிகழ்ச்சியில், தர்மபுரி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் நாகராஜூ, தர்மபுரி உதவி கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், சாலை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.