ஊட்டி : உபதலை ஊராட்சி கரிமராஹட்டியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.16.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கக்குச்சி ஊராட்சி ஒன்னதலையில் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல் நோக்கு சமுதாய கூடம் ஆகியவற்றை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி கரிமராஹட்டியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.16.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கக்குச்சி ஊராட்சி ஒன்னதலையில் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல் நோக்கு சமுதாய கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்து திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில்:அங்கன்வாடி மையம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இன்றைய தினம் குழந்தைகள் பயன் பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.07 லட்சம் மதிப்பில் உபதலை ஊராட்சிக்குட்பட்ட கரிமராஹட்டியில் அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு கிராமத்திலும் அங்கன்வாடி மையங்கள் உள்ள காரணத்தினால் பணிக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க வைக்க அங்கன்வாடி மையம் பயன்படுகிறது. மேலும் இந்த அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவு, கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன.மேலும் மாதந்தோறும் மருத்துவர்கள் ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும் சென்று குழந்தைகளின் உடல் நலம், எடை, உயரம் ஆகியவற்றினை பரிசோதித்து அதற்கேற்றவாறு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சத்தான உணவுகளை வழங்கி குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உடல்நிலை பற்றி தாய்மார்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றனர். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயமாக அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகும்.அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் அறிந்து பயன் பெற வேண்டும். ஒன்னதலை கிராமத்தில் மக்கள் பங்களிப்பு, அரசின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.42.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பல் நோக்கு சமுதாய கூடம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன்,ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன், சுனிதா நேரு, உபதலை ஊராட்சி தலைவர் பாக்யலட்சுமி,ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனகுமாரமங்கலம்,ஜெயசங்கர்,நந்தகுமார்,விஜயா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்….