கம்பம், பிப். 18: கம்பம் சிஎஸ்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் முன்னிலையில், அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் பாஸ்கர் திறந்து வைத்தார். கம்பம் 14 வது வார்டு கம்பம் மெயின்ரோட்டில் சிஎஸ்ஐ ஆரம்ப பள்ளி உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த பள்ளியில் மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பள்ளியின் சார்பாக கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் பாஸ்கரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அறக்கட்டளை சார்பில் ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டாக்டர் செல்வம் தலைமை தாங்கினார். கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், மதுரை இராமநாதபுரம் பேராயர், வட்டகைமன்ற தலைவர், முதன்மை பணியாளர்கள் முன்னிலையில் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் பாஸ்கர் பள்ளிக்கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் அன்பு குமாரி ஜெகன் பிரதாப், சமுதாய பெரியோர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.