கம்பம், செப். 1: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கம்பம் வட்டார கிளை நகரக் கிளை சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கம்பம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ரமேஷ், ஜீவா, ராகவன் விளக்க உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதிக்கும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இத்திட்டத்தில் பி.எட் மாணவர்களை கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் இயக்குனரின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணையவழி ஆன்லைன் தேர்வுகளை கைவிட வேண்டும். இஎம்ஐஎஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்கா கூடாது. காலை உணவு திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தவும், காலை உணவு திட்டம் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து திட்டம் சார்ந்த அனைத்து பணிகளையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.