கும்பகோணம், மார்ச் 2: கும்பகோணம் அருகேயுள்ள கபிஸ்தலம் பகுதியில் அனுமதி இன்றி மணல் அள்ளிய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து வண்டியை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கபிஸ்தலம் அருகேயுள்ள ராமானுஜபுரம் காவிரி ஆற்றுக்கரையில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை மறித்தனர். அப்போது மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் வண்டியிலிருந்து இறங்கி தப்பி ஓடினார்.இதையடுத்து போலீசார் மாட்டு வண்டி மற்றும் அதிலிருந்த மணலையும் பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை வலை வீசி தேடி வருகின்றனர்.