கூடலூர், நவ. 19: கந்தசஷ்டி விழாவின் 6ம் நாளான நேற்று மாலை கம்பம் பகுதிகளிலுள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரபத்மன் எனும் அரக்கனை முருகன் அழித்த நிகழ்வே சூரசம்ஹாரம் எனப்படுகிறது. சூரபத்மனை முருகன் அழித்ததன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள். கம்பம் கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சண்முகநாதன் சன்னதியில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலோடு தொடங்கியது.
விழாவில் நாள் தோறும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் 6ம் நாளான நேற்று மாலை சக்தி வேல்வாங்குதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கம்பம் வேலப்பர் கோயில், கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.