செய்யூர்: பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்தாண்டு தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், ஆர்வமுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தொடர்ந்து வந்த புயல் மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் கள் மூழ்கியும், அழுகியும் நாசமானது. குறிப்பாக மதுராந்தகம் ஒன்றியம் அத்திவாக்கம் கிராம விவசாயிகள் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் பயிரிடப்படும் நெற்பயிர்களை தை மாத காலங்களில் அறுவடை செய்வது வழக்கம்.இதேபோல் கடந்த ஆடி மாதம் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு நெற்பயிர்களை பயிரிட்டனர். ஆனால், பயிர்கள் வளர்ந்து வரும் காலங்களில் தொடர்மழை புயல் மழையும் பெய்ததாலும், தற்போதைய வெப்பச்சலனத்தால் ஏற்பட்ட மழையாலும், அறுவடைக்காக காத்திருந்த நெற்பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதுகுறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், எனக்கு, சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஆண்டுதோறும் நெற் பயிர்களை பயிர் செய்து அறுவடை செய்கிறேன். இந்தாண்டு வழக்கம்போல் நெற்பயிர்களை பயிரிட்டேன். ஆனால் அளவுக்கதிகமாக பெய்த மழையால், நான் பயிரிட்டு அறுவடைக்காக தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி, முளைத்து அழுகிவிட்டது. இப்பகுதியை சுற்றி பயிரிடப்பட்ட சுமார் 200 ஏக்கர் பயிர்களும், இதேபோன்று மழை நீரில் மூழ்கி அழிந்துவிட்டது. இந்த பயிர் சேதங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….