வத்திராயிருப்பு, ஏப்.4: கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. இந்த அணை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 47 அடி முழு கொள்ளளவு கொண்டது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை இல்லாததால் தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. தற்போது கோடை வெயில் துவங்கி கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 29 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.