Sunday, June 16, 2024
Home » கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை

கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை

by kannappan

கொழும்பு: இலங்கையில் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தற்காலிக தடை நீக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக  சிக்கலைச் சந்தித்து வருகிறது. அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.கொரோனாவால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்தது.கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே கடந்த 31ம் தேதி இரவில்  ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி, அவர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் போலீசார் பலர் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 1ம் தேதி நள்ளிரவு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.இதன்பின்னர் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நாடுமுழுவதும் ஊரடங்கையும் பிறப்பித்து அதிபர் கோத்தபய உத்தரவிட்டார். அரசுக்கு எதிராக போராட்டங்கள், அதை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இலங்கையில் பதற்றம் நிலவுகிறது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும்,நேற்று  நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  இதனால்,  யூடியூப், பேஸ்புக், டிவிட்டர்,வாட்ஸ் அப்,பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக ஊடகங்கள் நேற்றுமுன்தினம் இரவு முடக்கப்பட்டன. இந்தநிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.30 மணிக்கு நீக்கப்பட்டதாக தகவல் தொழிநுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.* மகிந்தா ராஜபக்சே ராஜினாமா?இலங்கையில் போராட்டம் நடக்கும் நிலையில், பிரதமர் மகிந்தா ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், அவருடைய ராஜினாமாவை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுத்து விட்டதாக கூறப்பட்டது. இதனால், பரபரப்பு நிலவியது. ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் இந்த செய்திகள் உண்மையல்ல என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. …

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi