விழுப்புரம், மார்ச் 15: நாயுடுமங்கலத்தில் நேற்று ஊர்வலமாக சென்று பாமகவினர் அக்னி கலசம் வைக்கப்போவதாக அறிவித்ததையடுத்து, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 186 இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தலைமையில் திருவண்ணாமலையில் இருந்து நாயுடுமங்கலத்திற்கு நேற்று ஊர்வலமாக சென்று மீண்டும் அக்னி கலசம் வைக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பாமகவினர் செல்ல உள்ளதாக சாலையின் ஓரமாக உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுத்தி விடாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
கடலூர் மாவட்டத்தில், தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். பண்ருட்டி சென்னை சாலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில், பழைய, புதிய பேருந்து நிலையம் மற்றும் கெடார் உள்ளிட்ட 75 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை உள்பட மாவட்டம் முழுவதும் 51 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.