கடலூர், ஆக. 7: கடலூர் ஆல்பேட்டை அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று சிறுவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு சிறுவனின் கையில் கை துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அந்த சிறுவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இதன் பின்னர் அவர்கள் அந்த கை துப்பாக்கியை கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காவலுக்கு நின்ற போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து அந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அப்போது அந்த துப்பாக்கி சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி என்பது தெரியவந்தது. மேலும் அந்த துப்பாக்கியில் குண்டுகள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது. ஏர் பிஸ்டல் துப்பாக்கி என்பது போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் போது, அந்த வகை துப்பாக்கியை பயன்படுத்தி பயிற்சி எடுப்பார்கள்.
இதையடுத்து புதுநகர் போலீசார் அந்த துப்பாக்கியை ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த துப்பாக்கி யார் பயன்படுத்திய துப்பாக்கி, அது எவ்வாறு தென்பெண்ணை ஆற்றில் வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.