சாயல்குடி : கடலாடி யூனியன் தலைமையிடமாக மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமமக்களின் வர்த்தக நகராகவும் உள்ளது. மேலும் இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, நீதிமன்றம், வங்கிகள் உள்ளிட்ட அலுவலகங்கள் இருப்பதால் மாணவர்கள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர்.இங்குள்ள பஸ்ஸ்டாண்டிற்கு தினந்தோறும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இதேபோல் கடலாடி காமாட்சியம்மன் கோயில் தெரு சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. அருகில் குளம், குடிநீர் பிடிக்கும் இடம் இருப்பதால் இப்பகுதிக்கு பெண்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ்ஸ்டாண்டில் பஸ் வெளியேறி செல்லும் சாலை முதல் சாயல்குடி சாலை சந்திப்பு வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் சேதமடைந்து கிடக்கிறது. இதேபோல் கண்ணன் கோயில் முதல் காமாட்சியம்மன் கோயில் தெரு வரை சாலை முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை குழிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. மேலும் டூவீலர்களில் செல்வோர் குழிகள் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். பெண்களும் தள்ளுவண்டியில் தண்ணீர் எடுத்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே காமாட்சியம்மன் கோயில் தெரு முதல் யூனியன் அலுவலக பஸ்ஸ்டாப் வரை கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சாலை அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….