Thursday, May 30, 2024
Home » ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் பாக்யராஜ் ஆதரவு: அதிமுகவினர் இணைந்து செயல்பட கோரிக்கை

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் பாக்யராஜ் ஆதரவு: அதிமுகவினர் இணைந்து செயல்பட கோரிக்கை

by kannappan

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துடன் நடிகர் பாக்யராஜ் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு அவர் கூறும்போது, அதிமுகவினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர் கடந்த 11ம் தேதி ஒன்றுகூடி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இந்த தேர்வை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும். அதேபோன்று, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் நீதிபதி கூறி இருந்தார். இதை எதிர்த்து எடப்பாடி அணியினர் மேல்முறையீடு செய்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று நீதிமன்றத்தில் எடப்பாடி திட்டவட்டமாக கூறி விட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் அதிமுக யார் தலைமையின் கீழ் செயல்படும் என்பது தெரியவரும். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று மாலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் திடீரென ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது வைத்திலிங்கம் எம்எல்ஏ உடன் இருந்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.சந்திப்புக்கு பிறகு நடிகர் பாக்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அதிமுக தொண்டர்கள் ஆகட்டும் எல்லோருக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் அளவுக்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். இதற்கு நானும் இணைந்து கொண்டு என்ன செய்ய வேண்டுமோ, எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்பட தயாராக இருக்கிறேன். எம்ஜிஆரின் பெயரையும், கட்சியையும் காப்பாற்ற நான் ஒரு சின்ன தொண்டனாக இருந்து எந்த அளவுக்கு வேலைப்பார்க்க முடியுமோ, அந்த அளவுக்கு இவர்களின் பின்னால் இருந்து கட்சிக்காக எல்லா பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். இதே கருத்தை ஓ.பன்னீர்செல்வத்திடமும் சொல்லி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்….

You may also like

Leave a Comment

seven − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi