ஆரணி, பிப்.10: போளூரில் நள்ளிரவில் ஓய்வுபெற்ற எஸ்எஸ்ஐ பைக்கை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் காந்தி ரோட்டு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்(62), இவர், போளூர் சப்டிவிஷனுக்குட்பட்ட கடலாடி காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பணி ஓய்வு பெற்று தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு சந்திரசேகரன் தனது சொந்த வேலையாக பைக்கில் வெளியில் சென்று வந்துள்ளார். பின்னர், அவரது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு இரவு உணவு அருந்திவிட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார்.
அப்போது, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் அவரது சந்திரசேகரன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும், பைக்கில் தீ மளமளவென என பரவி பயங்கர சத்தம் கேட்டு அலறியடித்து ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது, அவரது பைக் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, சந்திரசேகரன், அவரது வீட்டின் அருகில் இருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து சந்திரகேசரன் நேற்று முன்தினம் போளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம ஆசாமிகளை போலீசார் தொடர்ந்து வலை வீசி தேடி வருகின்றனர்.