திருமங்கலம் ஏப்.20: திருமங்கலம் அருகே 2 கிராமங்களில் ஒருவர் கூட ஓட்டு போடவில்லை. திருமங்கலம் அருகே கே.சென்னம்பட்டி, உன்னிப்பட்டி, ஓடைபட்டி, பேய்குளம், ஆவல்சூரன்பட்டி ஆகிய கிராமமக்கள் சுற்றுச்சூழல் பாதிக்கும் தனியார் உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்த ஐந்து கிராமமக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. திருமங்கலம் ஆர்.டி.ஓ சாந்தி, கள்ளிக்குடி தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டிஎஸ்பி அருள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடந்தினர்.
தனியார் உரத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்படும் என ஆர்டிஓ எழுத்து பூர்வமாக அறிவித்தும் பொதுமக்கள் ஏற்கவில்லை. நேற்று மாலை வரை சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய இரு கிராமங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஓடைப்பட்டி கிராமத்தில் 10 பேரும், உன்னிப்பட்டியில் 25 ஓட்டுகளும் போடப்பட்டன. ஆவல் சூரன்பட்டியில் 12 வாக்குகளும் பதிவாகின. இந்த சம்பவம் திருமங்கலம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.