சென்னை: ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் அண்மையில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி ஒன்றிய அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் இந்தியை கட்டாய பாடமாக்குவது குறித்து பரிந்துரைக்கப்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியை படித்தால் மடடுமே வேலை என்கிற நிலையை உருவாக்கியுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மறைமுக சதித்திட்டமாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து இந்தி திணிப்பையும், ஒன்றியம் முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வையும் திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கிரிராஜன், கனிமொழி சோமு, எம்.எல்.ஏக்கள் மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், டி.ஆர்.பி.ராஜா, எம்.கே.மோகன், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, இ.கருணாநிதி, பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, டாக்டர் எழிலன், வெற்றி அழகன், ஐட்ரீம் மூர்த்தி, மாவட்ட செயலாளர் சிற்றரசு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், திமுக தலைமை செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ்காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசியதாவது: ஒன்றிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நினைத்து கொண்டிருப்பதுபோல, இங்கே நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சி அல்ல. இப்போது முதல்வராக இருப்பது எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ அல்ல. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது வெறும் ஆர்ப்பாட்டம் தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக நடத்துவோமோ என்பதை உங்களின் கைகளில் தான் உள்ளது. திமுகவின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பது தான். அதில் இருந்து நாங்கள் சற்றும் விலக மாட்டோம். விட்டு கொடுக்க மாட்டோம். எங்களுடைய மாநில உரிமைகள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி. எப்போதும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டார். ஏனென்றால் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள். இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக. 1967ல் முதல் முறையாக இப்போது, மீண்டும் திமுக ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ்நாட்டில் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்ல போற ஒரே வார்த்தை, ‘இந்தி தெரியாது போடா’ அதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்போம். 3 மொழிப்போர்களை சந்தித்தது திமுக. 3 மொழிப்போரை முன்னின்று நடத்தியதே திமுகவின் மாணவர் அணி தான். இப்போது, மாணவர் அணியுடன் இளைஞர் அணியும் சேர்ந்து இந்த இந்தி திணிப்பை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் எந்த போராட்டத்தை எடுத்தாலும் வெற்றி பெற்று இருக்கிறோம். அதில் இந்த இந்தி திணிப்பு போராட்டத்திலும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். வள்ளுவர் கோட்டத்திலே முதல் கட்ட போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். அடுத்தக்கட்ட போராட்டம், மீண்டும் இந்தி திணிப்பை கையில் எடுப்பீர்கள் என்றால், தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடக்காது. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று டெல்லியில் உங்கள் அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தி காட்டுவோம். தமிழக மக்கள் என்றும் உங்கள் இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள். எப்படி 2019ம் ஆண்டு தேர்தலில் பாசிச பாஜவை ஓட ஓட விரட்டி அடித்தோமோ. அதே போல, 2024ல் தமிழக மக்கள் மீண்டும் பாசிச பாஜவை அடித்த விரட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதே போல இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்….