ஒட்டன்சத்திரம், மே 22: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாட்சியை சேர்ந்தவர் மணி என்ற ராமசாமி (72). விவசாயி. இவர் 3 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுயிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது.
அறுவடை செய்யும் நேரத்தில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் விவசாயி மணி என்ற ராமசாமி கூறுகையில், ‘நான் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த ஆண்டு தான் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் செவ்வாழை ரக வாழை பயிரிட்டு இருந்தேன். தற்போது அறுவடை செய்யும் நேரத்தில் பெய்த கனமழையால் நான் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் எனது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.