ஒட்டன்சத்திரம், ஜூன் 6: ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் திருமண மண்டப உரிமையாளர்கள், வணிக நிறுவனத்தினர், தனியார்- அரசு மருத்துவமனை பிரதிநிதிகள், பள்ளி- கல்லூரி நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அனைத்து வகை உணவக உரிமையாளர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2006ன்படி 100 கிலோவிற்கு மேல் உற்பத்தி சதவீதத்தை கொண்டிருக்கும் நிறுவனங்கள், அதிக கழிவுகளை உருவாக்குபவர்கள் நகராட்சியில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தாங்கள் உருவாக்கும் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மறுசுழற்சி செய்யும் வகையில் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நகராட்சியில் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, துணை தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் (பொ) சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.