மதுரை, டிச. 10: ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமின் கீழ் வேலைவாய்ப்பு முகாம், மதுரையில் நாளை (டிச.11) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலக செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐக்களில் பயின்றவர்களை டிரேடு பயிற்சியாளர்களாகவும், 8, 10 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் அனைத்து பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் புதிய பயிற்சியாளராகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநரை தேர்வு செய்கின்றனர்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது ஐடிஐ தேர்ச்சி சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு நாளை (டிச.11) நேரில் வர வேண்டும். தொழில்பழகுநராக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, மதுரை, மூன்று மாவடியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகலாம். அல்லது 94990 55748 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.