மதுரை: ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.ஆனந்தி ஓய்வு ெபற்றார். ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி எஸ்.ஆனந்தி இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி தலைமை வகித்தார். தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாழ்த்திப் பேசுகையில், ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐகோர்ட் கிளையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். குறுகிய காலத்தில் ஏராளமான வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.ஆனந்தி பேசுகையில், ‘‘மாவட்ட நீதிபதியாக இருந்த என் தந்தையின் ஊக்கத்தால் நான் நீதிபதியானேன். சுமார் 31 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீதித்துறையில் பணியாற்றியுள்ளேன். மதுரை சட்டக் கல்லூரியில் படித்து மதுரையில் நீதிபதியாக ஓய்வு பெறுகிறேன். எனது பணிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வது பெருமையாக உள்ளது’’ என்றார். நீதிபதி எஸ்.ஆனந்தி கடந்த 1991ல் சிவில் நீதிபதியாக துவங்கி படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2012ல் மாவட்ட நீதிபதியாகவும், 3.12.2020 முதல் ஐகோர்ட் கிளை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். இவரது சகோதரி மலர்விழி செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் இதர நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், வக்கீல்கள், ஐகோர்ட் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர். வீடியோ கான்பரன்சில் சென்னை ஐகோர்ட்டில் இருந்தவாறு நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் உள்ளிடடோர் பங்கேற்றனர். …