விழுப்புரம், நவ. 24: லஞ்ச வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் வண்டிபாளையத்தை சேர்ந்தவர் குமார். இவரது விவசாய நிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணியாளர்களைக் கொண்டு வரப்பு மடித்தல் பணியை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த திட்டத்தில் பணி மேற்கொண்டதற்கான தொகையை விடுவிக்குமாறு திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலுவிடம் கூறியுள்ளார். அப்போது அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த லஞ்சப் பணத்தை குமார், வேலுவிடம் கொடுத்தபோது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக வேலுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேலுவை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார். ஐஏஎஸ் அதிகாரி அண்ணாதுரை அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அண்ணாதுரை தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.