ஏழாயிரம்பண்ணை, செப்.29: ஏழாயிரம்பண்ணையில் 65 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல்லில் கடந்த சில தினங்களுக்குமுன் சவர்மா சாப்பிட்ட இளம்பெண் பலியானார். இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஏழாயிரம்பண்ணையில் உள்ள ஆடு இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மோகன்குமார் மற்றும் வெங்கடேஷ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கடையின் பின்புறம் பூட்டியிருந்த ஒரு வீட்டில் கெட்டுப்போன இறைச்சி 65 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் கடைக்கு ரூ.2000 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும் போது, இறைச்சி பாக்கெட்டுகளை ஓபன் செய்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டும். இறைச்சிகளை அதற்குரிய வெப்ப நிலையில் சரிவர பராமரிக்க வேண்டும். சைவ, அசைவ பொருட்களை தனித்தனியாக குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்றனர்.